|
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10-4-59-ல் பிறந்தேன். தந்தையார்
எஸ்.ராமநாதன் நெடுஞ்சாலைத்துறையில் கடைநிலை ஊழியர். தற்போது ஓய்வு
பெற்றுவிட்டார். தாயார் பெயர் ராஜமாணிக்கம்மாள். என் உடன்பிறந்தவர்கள் இரு
சகோதரிகளும், ஒரு சகோதரரும் ஆவர்.
ஐந்தாம் வகுப்பு வரை அருப்புக்கோட்டை நகராட்சி பள்ளியில் படித்தேன். அதன்பிறகு,
எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு வரை பயின்றேன். தேவாங்கர் கல்லூரியில்
பி.யூ.சி. வகுப்பை முடித்துவிட்டு எஸ்.பி.கே. கல்லூரியில் பி.காம். பட்ட வகுப்பில் சேர்ந்தேன்.
படிக்கும் பருவத்தில் ஓவியத்தில் ஆர்வம் உண்டு. ஹாக்கி பிளேயராகவும் பரிணமித்தேன்.
77-78 ஆம் ஆண்டில் படிப்பு முடிந்ததும், அரிசிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.
சும்மா இருக்கக்கூடாதே என்ற எண்ணத்தில் நான் வேலைக்கு சேர்ந்தபோதும், அந்த
வேலையில் என் தந்தைக்கு விருப்பமில்லை. படித்துவிட்டு அரிசிக்கடையில் வேலை பார்ப்பதா
என அவர் யோசித்தார். தான் ஒரு பியூனாக இருப்பதால் என்னை ஒரு குமாஸ்தா நிலையில்
பார்க்க வேண்டும் என விரும்பினார். மேலும், நான் பி.காம். படித்திருப்பதால் எனக்கு பேங்கில்
வேலை கிடைத்துவிடும் என நம்பினார். பி.காம். படித்த அனைவருக்கும் பேங்க்கில் வேலை
கிடைப்பதில்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன்.
அந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த குடும்ப நண்பர் ஒருவர், சென்னையில் பேங்க்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னை அழைத்தார். என் தந்தைக்கும் அதில் விருப்பம்
இருந்தது. அதனால் 78-79 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தேன். ஆனால் குடும்ப நண்பர்
சொன்னபடி வேலை கிடைக்கவில்லை. நானே எனது தகுதிக்கான வேலையைத் தேடத்
தொடங்கினேன். தினமும் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கினேன்.
பட்டர்ஃபிளை குக்கர் தயாரிக்கும் கம்பெனியின் தலைமை அலுவலகம் அப்போது
வண்ணாரப்பேட்டையில் இருந்தது. அங்கு ஒரு இண்டர்வியூவிற்கு சென்றேன். பி.காம்.
படித்திருந்ததால் சட்டையை "இன்" செய்து, ஷூ போட்டுக் கொண்டு டீக்காக சென்றேன்.
இண்டர்வியூ முடிந்ததும் கொருக்குப் பேட்டையில் ஒரு நீளமான சாக்கடையை கடந்து
அழைத்துச் சென்றனர். அங்கு அந்த கம்பெனியின் ஃபேக்டரி இருந்தது. சிவந்த நிறம் கொண்ட
ஒருவர், மசி படிந்த முகத்துடனும் அழுக்கு உடைகளுடனும் அங்கிருந்தார். அவரிடம் என்னை
அறிமுகம் செய்துவைத்ததும் எனக்கு வேலை கொடுக்கப்பட்டது. ஒரு மெஷினுக்குப் பக்கத்தில்
தரையில் விரிக்கப்பட்டிருந்த கோணியில் என்னை உட்காரச் சொன்னார். பேண்ட், சட்டை
அழுக்காகிவிடுமோ என்ற தயக்கத்துடன் உட்கார்ந்தேன்.
பட்டர்ஃபிளை நிறுவனத்தின் டம்ளர் தயாரிக்கும் பிரிவில்தான் எனக்கு வேலை. டம்ளர்
தயாரிப்பதில் 13 நிலைகள் உள்ளன. அதில் முதல் நிலை என்பது, வில்லையைத் துடைத்து
ஆயில் போடுவது. அதுதான் எனக்குத் தரப்பட்ட வேலை. பி.காம். படித்துவிட்டு இந்த
வேலைக்கு வந்துவிட்டோமே என்ற வருத்தத்துடன் முதல்நாள் வேலையைத் தொடங்கினேன்.
அன்று மாலையில் அந்த பேக்டரிக்கு ஒரு பென்ஸ் கார் வந்தது.
எனக்கு வேலை தந்த அழுக்கு உடை நபர், நல்ல ஆடைகளை அணிந்துகொண்டு அந்த
பென்ஸ் காரில் ஏறி புறப்பட்டார். அவர்தான் அந்த நிறுவனத்தின் முதலாளி என்பதை
அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அப்போதே எனக்குள் ஒரு எண்ணம்
தோன்றிவிட்டது. சர்டிபிகேட்டை வைத்துக் கொண்டு வேலை தேடுவதில் பயனில்லை.
தொழில் மீது அக்கறையும் பக்தியும் இருக்கவேண்டும். அதுதான் வெற்றியைத்தரும் என்பதை
உணர்ந்தேன்.
அந்த நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய பிறகு நண்பர் ஒருவருடன் சேர்ந்து 3000
ரூபாய் முதலீட்டில் ரப்பர் கம்பெனி ஒன்றைத் தொடங்கினேன். ரப்பர் வாங்குவது, "டை'
செய்வது, ஆர்டர் எடுப்பது, சப்ளை செய்வது என ஒருநாளைக்கு 20 மணிநேரம் வேலை
எல்லா இடங்களுக்கும் சைக்கிளிலேயே சென்று வரவேண்டும். உழைப்புக்கேற்ற
வருமானமில்லை. அதனால் சரியான உணவுமில்லை. ஒருவேளைதான் சாப்பிட முடியும்.
அதுவும் சீப் அண்ட் பெஸ்ட்டாக உள்ள செட் தோசைதான். கடுமையான வேலை,
அரைகுறை உணவு இவற்றால் சைனஸ், பைல்ஸ் என பல உபாதைகளால் உடல்நலம்
பாதிக்கப்பட்டு சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு திரும்பச் சென்றுவிட்டேன்.
அருப்புக்கோட்டையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு 3 மாதம் பெட் ரெஸ்ட்
எடுக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், எனது ஓவியத்திறனை வளர்த்துக்கொண்டு நிறைய
படங்களை வரைந்தேன். படம் வரையும் திறமை என்னிடம் இருப்பதைக் கண்டதுமே
பத்திரிகையில் வேலை கிடைக்கும் என பலரும் தெரிவித்தனர். மீண்டும் சென்னைக்குத் திரும்பி,
நண்பரின் வீட்டில் தங்கி வேலைதேடும் படலத்தில் இறங்கினேன்.
அப்போது எம்.ஜி.ஆரால் நடத்தப்பட்ட "தாய்" பத்திரிகைக்கு ஆசிரியராக வலம்புரிஜான்
இருந்தார். ஒருநாள் காலையில், தாய் அலுவலகத்தி-ருந்து 14 பேர் குரூப்பாக வெளியேறினர்.
அன்று மதியம் நான் அங்கு வேலை கேட்டு சென்றேன். யார் வந்தாலும் வேலைக்கு எடுக்க
வேண்டிய நெருக்கடியில் இருந்த "தாய்" அலுவலகம் என்னை வரவேற்றது. இளைஞர்கள்
திறமையை ஊக்குவிக்கும் இயல்பைக் கொண்ட வலம்புரிஜான், எனது ஓவியத் திறனைப்
பார்த்து வேலைக்கமர்த்தினார். அங்குதான் லே-அவுட் விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
"தாய்"க்கு பிறகு ஷ்யாம், ராபின், பாலகணேசன் ஆகிய மூவரும் தொடங்கிய திரைச்சுவை
பத்திரிகையில் லே-அவுட் மற்றும் புரடக்ஷன் பணிகளை மொத்த காண்ட்ராக்டராக இருந்து
கவனித்தேன். ஒரு பக்கத்திற்கு 5 ரூபாய் என்ற ரேட்டில் ஊதியம் கிடைத்தது. பத்திரிகை
புரடக்ஷன் தொடர்பான விவரங்களை அங்கு கற்றேன். திரைச்சுவையில் பிரிவு ஏற்பட்டு ஒரு
பிரிவினர் "தராசு" பத்திரிகையை தொடங்கியபோது அதற்கும் நான்தான் லே-அவுட் செய்தேன்.
அட்டைப்பட லே-அவுட், வாசகர்களை பெரிதும் கவர்ந்தன. துணிச்சலான செய்திகளை
எதிர்கொள்ளும் அனுபவம் அங்குதான் கிடைத்தது. ஒரு பத்திரிகை எப்படி வெற்றி பெறுகிறது
என்ற சூத்திரத்தையும் அங்கு கற்றுக் கொள்ள முடிந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக தராசு பத்திரிகையி-ருந்து வெளியேற நேர்ந்தது. நம்மை
நம்பி வந்தவர்களுக்காக ஒரு பத்திரிகையை தொடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அரசியல் பிரமுகர் க.சுப்பு "நக்கீரன்" என்ற பெயரில் 5 இதழ்கள் வெளியிட்டிருப்பதையும்
அவரை அணுகினால் டைட்டில் கிடைக்குமென்பதையும் அறிந்தேன். ஆனால் அவர் நிறைய
எதிர்பார்ப்பார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
க.சுப்புவிடமுள்ள டைட்டில் கிடைத்தால் "நக்கீரன்" பத்திரிகையை உடனே
தொடங்கிவிடுவது என்ற முடிவுடன் சுப்புவை சந்தித்தேன். அவரோ எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் டைட்டிலை எங்களுக்கு மாற்றிக் கொடுத்தார். அருமையான டைட்டில் கிடைத்து
விட்டது என்றாலும் மூலதனமாக 4000 ரூபாய் மட்டுமே இருந்தது. பத்திரிகைகளுக்கு
மூலப்பொருள் வழங்குபவர்கள் மற்றும் சப்ளையர்கள் ஆகியோர் என் உழைப்பின் மீது
நம்பிக்கை வைத்து 4 முதல் 10 வாரங்களுக்கு கடன்தர தயாராக இருந்தனர். அவர்கள்
ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு 1-வது கூவம் ஆற்றின் ஓரமாக நாங்கள் தங்கியிருந்த 10"
ல 10" அறையில் தான் நக்கீரன் அலுவலகம் இயங்கத் தொடங்கியது. 88-ம் வருடம் ஏப்ரல்
மாதம் 20-ந்தேதியன்று நக்கீரனின் முதல் இதழ் வெளியானது. அப்போது தனிக்கட்சி
தொடங்கியிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா"
என்ற தொடரும் நக்கீரனில் வெளிவரத் தொடங்கியது.
திறமைமிக்க டீம், கடினமான உழைப்பு இவற்றையே மூலதனமாகக் கொண்டு, எதையும்
துணிந்து புலனாய்வு செய்து செய்திகளை வெளியிடத் தொடங்கினோம். 89-ல் நடந்த
சட்டமன்றத் தேர்தலின் போது மூன்று கட்டமாக சர்வே எடுத்து நக்கீரன் வெüயிட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது நக்கீரன் சர்வேக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான
வெற்றி கிடைத்தது.
வாசகர்கள் அமோக ஆதரவினால் ஒரே ஆண்டில் 1,33,000 பிரதிகளை நக்கீரன்
எட்டிப் பிடித்தது. அதன் பிறகுதான் 49, ஹாரிங்டன் சாலைக்கு நக்கீரன் அலுவலகம் மாற்றம்
செய்யப்பட்டு பின்னர் தற்போதைய முகவரியான 105 ஜானி ஜான்கான் தெரு,
ராயப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
1997-ம் வருடம் சந்தன கடத்தல் வீரப்பன் பிடியி-ருந்து மீட்டு வந்ததற்கு இரு மாநில
அரசுகளும் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தது. அதே வருடம் நீதியரசர்
கிருஷ்ணய்யர் விருது நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களால் வழங்கப்பட்டது. ஜேசிஸ்
அமைப்பின் சார்பாக 1997-ம் வருடத்தின் சிறந்த 10 இந்திய இளைஞர்களில் ஒருவனாக நான்
தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2005-ம் வருட தொடக்கத்தில் இந்தியா டுடே பத்திரிகை
தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்வாக்கு படைத்த 25 பேர்களில் நானும் ஒருவன் என்பது
குறிப்பிடத்தக்கது. திராவிடர் கழகத்தால் வழங்கப்படும் பெரியார் விருது 2005-ம் வருடத்தில்
கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது.
நக்கீரன் டீமில் இளைஞர்களே இடம் பெற்றிருப்பது போல் நக்கீரன் ஏஜெண்ட்டுகளும்
இளைஞர்களாகவே நியமிக்கப்பட்டனர். அவர்களும் நக்கீரன் வளர்ச்சிக்கு முழுமையான
ஒத்துழைப்பை தந்து வருகின்றனர். சுவர் விளம்பரம் செய்தல், திரும்பி வரும் பிரதிகளை
பொதுமக்களிம் கொடுத்து படிக்கச் செய்தல்- இப்படி பலவிதமான வழிகளில் நக்கீரன்
வளர்ச்சியடைய ஏஜெண்ட்டுகள் ஒத்துழைத்தனர்.
அநீதிகளை சுட்டிக்காட்டவும் அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும் தயங்காத நக்கீரனின்
உண்மைச் செய்திகள் மீது வாசகர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையினால்
இன்று பல லட்சம் பிரதிகளுடன் வாரமிருமுறை இதழாக வெற்றிகரமாக வெளிவந்து
கொண்டிருக்கிறது நக்கீரன்.
ஜாம்பவான்களால் மட்டுமே பத்திரிகை நடத்த முடியும் என்ற மாயையை உடைத்தெறிந்து
உழைப்பையும் ஒருங்கிணைந்த பணியையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு பத்திரிகை நடத்தி
வெற்றிபெற முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறது நக்கீரன்.
இந்த நாடு விவசாய நாடு. பெரும்பாலான மக்கள், அடிப்படை வசதிகளில்லாத கிராமங்களில்தான்
வாழ்கின்றனர். அத்தகைய கிராமங்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும் சமூகப் பொறுப்புணர்வையும்
ஊட்டவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நக்கீரன், அந்த பணியில் வெற்றி
பெற்றிருக்கிறது என்பதற்கு பிரான்சிஸ்-கனாய் என்ற நிறுவனம் நடத்திய சர்வே சான்றாக விளங்குகிறது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராம மக்களிடம் இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில்,
தமிழக கிராம மக்கள் விரும்பிப் படிக்கும் பத்திரிகைகüல் நக்கீரன் இரண்டாம் இடம் பெற்றிருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. (ஆதாரம் : பிரான்ஸிஸ்-கனாய் மார்க்கெட்டிங் சர்வே)
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற தாரக மந்திரத்தை லட்சியமாகக் கொண்டு
செயல் பட்டு வரும் நக்கீரன், ஆள்வோரின் எந்தத் தவறையும் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை.
அந்த வகையில், 89-ம் ஆண்டில் தி.மு.க. அரசு நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க.வில் ஜெயலதா
அணி, திருநாவுக்கரசு அணி என இரு பிரிவுகள் ஏற்பட்டு தலைமைக் கழகத்தைக்
கைப்பபற்றுவதில் மோதல் ஏற்பட்டது. அப்போதைய தி.மு.க. அரசாங்கம், இந்த மோத-ல்
ஜெயல-தா அணி பக்கம்தான் தவறு உள்ளது எனக்கூறி தலைமைக் கழகத்திற்கு சீல் வைத்தது.
ஆனால் உண்மையில் யார் பக்கம் தவறு என்பதை, இரண்டு நாட்கள் கழித்து வெளியான நக்கீரன்
புகைப்பட ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. பாதிக்கப் பட்டவர்கள் ஜெயலலிதா
அணியினர்தான் என்பதையும் தி.மு.க. அரசு ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது என்பதையும்
அந்த புகைப்பட ஆதாரம் விளங்கியது. நக்கீரன் வெளியிட்ட ஆதாரங்களை ஜெயலலிதா
அணியினர், பாராளுமன்றம் வரை எடுத்துச்சென்று தலைமைக் கழகத்தை மீட்டனர்.
புலனாய்வு செய்து செய்திகளை வெளியிடுவதில் நக்கீரன்தான் நம்பர் 1 என்பதை எல்லா
காலகட்டங்களிலும் நிரூபித்து வந்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் டெலிபோன்கள்
ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்ற உண்மையைச் சொன்ன ஒரே காரணத்திற்காக என்னையும்
என்னுடைய அசோசியேட்ஸ் இருவரையும் 4 நாட்கள் சிறையில் அடைத்தனர். அதேநேரத்தில்
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்தில் தாக்கப்படுகிறார். காவிரி
பிரச்சினையால் வெகுண்டெழுந்த விவசாயிகள்தான் சிதம்பரத்தை தாக்கினர் என்று அப்போதைய
முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெüயிட்டார். அந்த அறிக்கை வெளிவந்து இரண்டு நாட்கள்
கழித்து வெளியான நக்கீரனில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தாக்கியது அ.தி.மு.க.
இளைஞரணியைச் சேர்ந்த இளவரசன்தான் என்பது புகைப்பட ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.
ப.சிதம்பரத்திற்கு கருப்புக்கொடி என்ற பெயரில் இளவரசன் ஒரு இரும்புத்தடியை தூக்கியபடி
ஓடிவந்து சிதம்பரத்தை தாக்குவது வரையிலான ஷாட் பை ஷாட் படங்களை நக்கீரன்
வெளியிட்டது. இந்த ஆதாரமும் பாராளுமன்றம் வரை பேசப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத சம்பவங்கள் அனைத்தும் நக்கீரனால்
வெட்ட வெளிச்சமாக்கப்பட்டன. சிதம்பரம் அண்ணாமலைநகர் பத்மினி, வாச்சாத்தி மற்றும்
சின்னாம்பதி பெண்கள் ஆகியோர் காவல்துறையினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்
பட்டதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது நக்கீரன். மக்களின் சொத்துக்களை சுரண்டி
அரசு நிலமான டான்சியை ஜெயலலிதா வாங்கியதையும், அவருடைய ஹைதராபாத பங்களா
மற்றும் திராட்சை தோட்டத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டோம். ஜெயலலிதாவின் உடன்
பிறவா சகோதரி சசிகலாவும் அவரது உறவினர்களும் மன்னார்குடி, திருத்துறைபூண்டி உள்ளிட்ட
பகுதிகளில் வாங்கிய சொத்துக்கள் பற்றிய விவரங்களை மக்களிடம் அம்பலப்படுத்தினோம்.
ஜெயலலிதா ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை தொடர்ச்சியாக நாம் வெளயிட்ட ஒரே
காரணத்திற்காக நமது அலுவலகத்திற்கு 29 நாட்கள் கரண்ட்கட் செய்யப்பட்டது. "இங்கே ஒரு
ஹிட்லர்" என்ற தொடரை நக்கீரனில் க.சுப்பு எழுதியதற்காக தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்கள்
எரிக்கப்பட்டன. நக்கீரனை அச்சிட்டு தந்த பிரிண்டர் அய்யா கணேசன் காவல்துறையினரின்
சித்ரவதையால் மரணமடைந்தார். நக்கீரனை யாரும் அச்சிட்டுத் தரக்கூடாது என்று சென்னையில்
உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. அதைமீறி அச்சிட்ட
பிரஸ்களுக்கு பவர் சப்ளை நிறுத்தப்பட்டது. ஜெனரேட்டர்கள் எரிக்கப்பட்டன.
இத்தகைய நெருக்கடிகளிலும் நக்கீரன் இதழ் தொடர்ந்து வெளியாகி அரசின் அக்கிரமங்களை
வெளிச்சம் போட்டுக் காட்டியது. தாமிரபரணி ஆற்றை சீரமைப்பதற்காகக் கூறி உலகவங்கித்
திட்டத்தின் 25 கோடி ரூபாயை ஜெயலலிதா அரசுகையாடல் செய்ய முயன்றதை நக்கீரன்
நிருபர் கதிரை துரை அம்பலப்படுத்தியதால் அவர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போதும்கூட அந்த ஊழல் செய்தி அம்பலப்படுத்தப்பட்டது. அதனால் அத்திட்டம்
கைவிடப்பட்டு ஊழல் தடுக்கப்பட்டது. இப்படிபல ஊழல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
கொடூரமான 6 கொலைகளை செய்தவன் ஆட்டோசங்கர். அதனால் தூக்குத்தண்டனை
பெற்றான. அவனுடைய பின்னணி என்ன, இத்தகைய ஆட்டோ சங்கர்கள் உருவாக காரணமாக
இருந்த அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் யார், யார் என்பதை
தூக்கு தண்டனை கைதியான அவனிடமிருந்தே பெற்று தொடராக வெளியிட நக்கீரன்
முயன்றபோது வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. அந்த வழக்கில் இந்திய பத்திரிகையுலகிற்றே
கேடயமாகவும் பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையிலும் மகத்தான தீர்ப்பை சுப்ரீம்
கோர்ட் மூலம் பெற்றுத்தந்தது நக்கீரன். இந்தியாவின் இன்றைய பத்திரிகைகளுக்கும்
இனிவரவிருக்கும் பத்திரிகைகளுக்கும் இந்த தீர்ப்பு மிகப்பெரிய பாதுகாப்பை அளிக்கின்றது.
(ஆதாரம் : சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு)
வீரப்பன் என்பவன் காட்டிளிருந்து சந்தன மரங்களையும் யானைகளைக் கொன்று அதன்
தந்தங்களையும் கடத்துகின்ற கொள்ளைக்காரன். இவனைத் தேடிச் சென்ற போலீசாரும்
வனத்துறையினரும் இவனால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தன்னை காட்டிக் கொடுத்தவர்களையும்
இவன் கொடூரமாக கொலை செய்தான். இப்படிப்பட்ட கொடூரமானவனைப் பற்றி மக்களிடம்
சொல்ல வேண்டுமென்றால், போலீஸ் வைத்திருந்த பழைய பிளாக் ? ஒயிட்படம் மட்டுமே
இருந்தது. அதனால், வீரப்பன் என்றொருவன் இருக்கிறானா அல்லது வீரப்பனின் பெடலில்
யாரேனும் இத்தகைய கொடூரங்களை செய்துவிட்டு வீரப்பன் மீது பழியைப் போடுகிறார்களா
என்பதை புலனாய்வு செய்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய தார்மீக கடமை
பத்திரிகையானனுக்கு உண்டு என்ற அடிப்படையில் நக்கீரன் இந்த சவாலை மேற்கொண்டது.
93-ம் ஆண்டில் நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியன் முதன்முதலாக வீரப்பனை சந்தித்து பேட்டி எடுத்தார்.
அந்த நேரத்தில் வீரப்பன் நடத்திய தாக்குதலில் போலீஸ் துறையைச் சேர்ந்த 22 பேர் கொடூரமாகக்
கொல்லப்பட்டனர். வீரப்பனை பிடிக்கவேண்டும் என தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களையும்
சேர்ந்த அதிரடிப்படையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையும் தீவிரமாக செயல்பட்டன.
வீரப்பன் நடமாடுகின்ற பகுதியை "வீரப்பன் காடு" என்றே குறிப்பிடுகிறார்கள். 6000 சதுர
கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதியில் 175 கிராமங்கள் உள்ளன. 6 லட்சம் மக்கள்
வாழ்கிறார்கள். வீரப்பனைப் பிடிப்பதற்காக சென்ற முப்படைகளும் கிராமங்களுக்குள் புகுந்து
அந்த மக்களை நாசம் செய்து, வீடுகளை எரித்து வீட்டில் இருப்பவர்களை தயவு தாட்சண்யமின்றி
பிடித்து சென்று கொன்று குவித்து, தடா வழக்கில் கைது செய்தது. பெண்களை பாலியல்
பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியது. நாளுக்கு நாள் வெறியாட்டம் அதிகரித்துக்கொண்டே
இருந்தது. இந்த விஷயத்தை நாம் மக்களுக்கு தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தோம். போலீஸாரின்
அராஜகத்தை நக்கீரன் தெளிவுபட எடுத்துக்கூறியது.
நாம் 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். வீரப்பன் காட்டில் வாழும்
6 லட்சம் மக்களோ இன்னமும் சுதந்திரத்தைக் காணவில்லை. வீரப்பனை காட்டிக்கொடுக்காவிட்டால்
அதிரடிப்படையினரிள் தொந்தரவு. காட்டிக் கொடுத்தாலோ வீரப்பனின் தொந்தரவு. இந்த மக்களுக்கு
எப்போதுதான் விடிவு என்பதே நம்முன் கேள்வியாக எழுந்தது.
வீரப்பனை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை என்பது தெளிவாகிவிட்டது. ஏறத்தாழ
150 கோடி ரூபாய்க்கும் மேல் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. திறமைமிக்க பல
போலீஸ்காரங்களை இழந்திருக்கிறேம். இரண்டு மாநிலங்களுக்கும் தலைவலியாக உள்ள
வீரப்பனால் 6 லட்சம் மக்கள் நிம்மதி யின்றி தவிக்கிறார்கள். அந்த 6 லட்சம் மக்கள்
நிம்மதிக்காக அவனை நாம் ஏன் சரணடைய வைக்கக் கூடாது என்ற எண்ணம் எழுந்ததால்
இரண்டுமுறை நான் காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்து அவனுடைய நிபந்தனைகளைக்
கேட்டறிந்து அதனை இரண்டு மாநில அரசுகளுக்கும் கொடுத்தோம்.
அவனுடைய சரணடைதலுக்கு வேண்டிய முயற்சிகளை நக்கீரன் எடுத்தபிறகு சுமார் ஒன்றரை
வருடங்களாக அவன் யாரையும் கொல்லாமல் இருந்தான். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில்,
யாராலும் பிடிக்க முடியாத ஒருவனின் வெறித்தனத்தை முடக்கி வைத்து கொலைகள் புரிவதையே
வாடிக்கையாகக் கொண்ட மிருகவெறி பிடித்தவனிடமிருந்து 9 பேரை விடுவித்தது நக்கீரன் சாதனை!
அதற்காக இரு மாநில அரசுகளும் பாராட்டுப் பத்திரம் வழங்கி நக்கீரனை கௌரவித்தது.
நூற்றுக்கும் மேலான சமூக அமைப்புகள் நக்கீரனை பாராட்டி விருதுகளும், பரிசுகளும் வழங்கின.
முக்கியமாக ஆசிரியருக்கு நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களால்
வழங்கப்பட்டது. ஜுனியர் சேம்பர் அமைப்பின் சார்பில் 1997-ம் வருடத்தின் சிறந்த 10 இந்திய
இளைஞர்களில் ஒருவராக நக்கீரன் ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000-ம் ஆண்டு நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டபோது ஆயிரக்கணக்கான
கர்நாடக தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டபோது நக்கீரன் ஆசிரியர்
மற்றும் நிருபர்கள் அரசு தூதர்களாக சென்று காட்டில் ராஜ்குமார் உயிரோடு இருக்கும்
புகைப்படத்தை வெளியிட்டதால் அந்தப் பதட்டம் தணிந்தது. அதுவே 108 நாட்கள் வீரப்பன்
பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்கவும், அஸ்திவாரமாகவும் அமைந்தது.
2001 தேர்தளில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு
அமைந்ததும், அவரது உத்தரவின்பேரில் நக்கீரன் மீதும் நிருபர்கள் மீதும் ஏராளமான பொய்
வழக்குகள் போடப்பட்டன. கர்நாடக போலீஸால் கடத்தி செல்லப்பட்ட நிருபர் சிவசுப்ரமணியன்
மீது தொடர்ச்சியாக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்து 11 மாதம் 11 நாட்கள் சிறைவாசம்
அனுபவித்தார். அதே போல் நிருபர்கள் சுப்பு, மகரன், பிரகாஷ் ஆகியோர் மீதும் பொய் வழக்குகள்
போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சகட்டமாக நக்கீரன் ஆசிரியர் மீது வீரப்பன்
வழக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக போட்டனர். அவற்றில் அவர்கள் எண்ணம் ஈடேறாததால்
கொடூரமான முறையில் கைது செய்து பொடா சட்டத்தில் ஆசிரியரை சிறையிலடைத்தது ஜெயலலிதா
அரசு. நீண்ட வலுவான சட்டப் போராட்டத்தின் விளைவாக 253 நாட்கள் சிறையலி-ருந்த
ஆசிரியர் விடுதலையானார்.
இத்தகைய அரசு அச்சுறுத்தல்களுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் பொய் வழக்கு
களுக்கும் நடுவே நக்கீரன் தனது புலனாய்வு தனித்துவத்தை விடாமல் மேலும் பல மைல்கல்
செய்திகளை வெüயிட்டது. மதுரை ஷெரினாவின் பின்னணி, சிவகாசி ஜெயலட்சுமி போலீஸ்
அதிகாரிகளின் தொடர்புகள், முத்திரைத்தாள் மோசடியில் முகம்மது அலியின் பங்கு ஆகியவற்றை
நக்கீரன் தான் முதன்முதலில் உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியது.
நக்கீரன் தனது புலனாய்வு மூலம் காஞ்சிபுரம் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை
வழக்கில் சங்கராச்சாரியார் தொடர்பு பற்றி வெளியிட்டது. 3 மாதங்கள் கழித்து சங்கராச்சாரியார்
கைது செய்யப்பட்டபோது ஹிந்து, பிரண்ட்லைன், அவுட்லுக் ஆகிய பத்திரிகைகள் தங்கள்
தலையங்கத்திலே நக்கீரனின் சொந்த புலனாய்வு திறமை பற்றி பாராட்டியுள்ளது.
2004-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும்
என்று சர்வே மூலம் நக்கீரன் வெüயிட்டது 100% உண்மையானது.
2005 வருட தொடக்கத்தில் இந்தியா டுடே பத்திரிகை தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்வாக்கு
படைத்த 25 பேர்களில் நக்கீரன் ஆசிரியரும் ஒருவர். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும்
தாண்டி அநீதிகளை சுட்டிக் காட்டவும், அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கவும் தயங்காமல் தனது
புலனாய்வு செய்திகளாலும், நம்பகத்தன்மையாலும் நக்கீரன் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
என்றும் அன்புடன்
(நக்கீரன்கோபால்)
|